விதியின் வலை

விதியின் வலை

வானம் இருண்டது ,
மேகம் திரண்டது ,
இடியுடன் மின்னல்
மழையுடன் புயல்,
நூல் போல் இழை
சோ என்ற மழை

ஒரு அறையில் நான் தனிமையில் ,
பிரித்த ஒரு புத்தகம் என் கையில்,
திடீரென்றுஒரு பூச்சி என் தோளில்
படபடப்பு அதன் இறக்கையில்
மழையில் நனைந்த நேரம்
அதன் உடலும்  ஈரம்
என் கை அதைத் தட்டியது
சுவற்றின் மூலையில் விழுந்தது .
அதன் பக்கம் என் கவனம்
பூச்சி சாதித்தது மௌனம் .
ஒன்றிக்கவனித்தேன் அதனை
அழகு பட்டாம்பூச்சிதனை
சிருஷ்டியின் கைவண்ணம் என்ன?
அதில் கலந்த வண்ணம் தான் என்ன?
வானவில் போன்ற வண்ணங்கள்!
அதில்  தீட்டியக்கோலங்கள்.
அது பறக்காதா? என்ற ஏக்கம் .
கூடவே வந்தது துக்கம்
பிரார்த்தனையும் சேர்ந்தது
திடீரென்  அது பறந்தது .
ஒரே வியப்பு
ஒரே மலைப்பு
சுற்றிச்சுற்றிப் பறநதது
சுவற்றில் அது அமர்ந்தது .

நீளவிளக்கின் பின் ஒரு வலை
கண்டேன் முக்கோணத்தலை .
நம் பல்லிதான்
அதன் யமன் தான்
அதன் விதியை மாற்றினேன்
கம்பால் சுவற்றைத்  தட்டினேன்
ஓடி ஒளிந்தது
பூச்சியும் பறந்தது
என் முகத்தில் வெற்றிப்புன்னகை
விதியை வென்று  சூடிய வாகை
”டிக்” என்ற ஒரு ஒலி கேட்டேன்
கீழே விழுந்தப் பூச்சியும் கண்டேன்
அதன் இறக்கைகள் என் மேல்
வண்ணக்கலவைகள் என் மேல்
சுழலும் விசிறி அதன் யமனானான்
தன் கடமைச்செய்த தருமனானான்

வண்ணாத்திப்பூச்சியின் உடல்
சுவரோரம் கிடைந்தது
விதி வென்று அங்கு சிரித்தது

Leave a Reply