நடராஜா

April 9, 2007

nataraja.jpg

நடராஜர் என்றாலே நடனத்திற்கெல்லாம்

மன்னர்!

ஸ்ரீ தியாகராஜர் என்றாலும் நடனம் நிச்சயமாக இருக்கும்.

“நடராஜா…நடராஜா…நர்த்தன சுந்தர நடராஜா!

சிவராஜா…சிவராஜா…சிவகாமிபிரிய…சிவராஜா!”
என்ற பாட்டு ஒன்று உண்டு. நடராஜர் நடனம் ஆடிய இடங்கள் ஏழு, இதை சப்தவிடங்கள் என்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாக நடனம் ஆடி இருக்கிறார்{அவரிடமிருந்து தான் பரதக்கலை பிறந்தது}. அந்தந்த இடத்தில் அவரது பெயரும் மாறுகிறது, நடனத்தின் பெயரும் மாறுபடுகிறது.

திருவாரூரில்…ஸ்ரீ தியாகராஜரின் பெயர் வீதிவிடங்கர். அவர் ஆடும் நடனம் அஜபா நடனம். அதாவது மூச்சு இழுக்கும் போது ஒரு அசைவு வெளி விடும் போதும் ஆடும் நடனம்.
திருமறைக்காட்டில் ஸ்ரீதியாகராஜர் புவனிவிடங்கத் தியகராஜர் ஆகிறார். இவரது நடனம் ஹமச நடனம்.
அன்னப் பட்சிப்போல் மெல்ல அசைந்து அசைநது ஆடி வரும் நடனம் மந்த கதியில் ஆடுவார்.
திருநள்ளாற்றில் நகவிடங்கத்தியாகராஜர் எனப்படுகிறார். நகவிடங்கர் என்றால் பெரியமலை போல் விளங்குவது. இங்கு மூர்த்தி தானாகவே தோன்றியதால் சுயம்பு என்று அழைக்கப் படுகிறார். இவரது நடனம் உன்மத்த நடனம். உன்மத்தம் என்றால் பித்து அல்லது தன் நிலை இழத்தல் என்று சொல்லலாம்.
திருவாயமூரில் இவர் நீலவிடங்க தியாகராஜர் ஆகிறார். இவர் ஆடும் நடனம் கமல நடனம். அதாவது தாமரை மலர் நீரின் அசைவுக்கேற்ப பக்கத்தில் சாயாமலும், நிலைப் பெயராமலும் ஆடுவது.
திருக்காறாயிலில் ஆதிவிடங்க தியாகராஜர் ஆகிறார். இங்கு இவர் ஆடுவது குக்கூட நடனம். அதாவது கோழிபோல் நேரோட்டமும் பக்க ஓட்டமும் கொண்டு, ஓடி ஓடி நடனம் புரிவது.
திருக்குவளையில் அவனிவிடங்கத்தியகராஜர் என்று
அழைக்கப்படுகிறார். இங்கு ஆடும் நடனமோ பிரம நடனம் ப்ரம்ர என்றால் வண்டு, வண்டு எப்படி பூவைச் சுற்றி சுழன்று வந்து… தேனுக்காக வட்டமிடுமோ அதேப் போல் சுழன்று சுழன்று வரும் நிலை.
திருநாகைகாரோணத்தில் இவர் பெயர் சுந்தர விடங்க தியாகராஜர் என்று பெயர்பெறுகிறார். இங்கு இவர் ஆடும் நடனத்தின் பெயர் பாராவார தரங்க நடனம். தரங்கம் என்றால் அலைகள் கடல் அலை போல் மேலே,கீழே எழுந்து பின் சுருண்டு மடங்கி விழுந்தாடும்
நடனம். அந்தக் காலத்தில் திரு குமாரி கமலா இப்போது இருக்கும் டாக்டர். ஸ்ரீமதி பதமா சுப்ரமண்யம் ஆடும் நடனம் இதைப்போல் சுத்தமானது. பந்தணைநல்லூர் பாணி என்பார்கள்,
“காலைத்தூக்கி ஆடும்தெய்வமே!”என்றபாட்டு ஞாபகம் வருகிறது.

“ஓம் நமசிவாய”

அன்புடன் விசாலம


காதலர் தினம்

April 9, 2007

image002.gif

தந்தை தினம் வருகிறது… பல பேர்களுக்கு அது வந்து போவதே தெரிவதில்லை! தாய் தினம் வருகிறது… கொஞ்சம் தொலைக்காட்சி மூலமாய் தெரிந்தாலும்

“அம்மாவென்றழைக்காத உயிரில்லையே” என்பது போல் ஓரிரண்டு பாட்டுக்களுடன் முடிவடைகின்றன. ஆனால் இந்தக் காதலர் தினம் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத்தொடங்கி, ஒரு கலக்கல் கலக்கி விடுகிறது. அது ஏன்?

 நம் நாடுபெற்றோர்களைத் தெய்வமாக  மதிக்கும் நாடு தாய் தந்தையைப் பராமரித்து கடைசிவரை அவர்களை பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்களின் கடமை! ஆகையால் தனியாக தாய், தந்தை தினம் தேவையே இல்லை. நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள். மேல் நாட்டினிலே மகன், மகள் 16 வயது வந்தால் தனியாக குடி போகிறார்கள், அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலை இடுவதை அவர்கள் விரும்புவதில்லை…ஆகையால் இந்தத் தந்தை தினம், தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள். இப்போது காதலர் தினம் நம் முன்னால் வருகிறது நம் நாட்டு கலாசாரம், காதலைப் புனிதமாக மதிக்கிறது. இலை மறைவு தலை மறைவு என்பார்கள், நான் பாரீஸில் போன போது… அங்கு தினமும் காதலர் தினமாகத்தான் இருந்தது. எவ்வளவு விரசமானக் காட்சிகள்! நான் தான் என் திசையைத் திருப்பிக் கொண்டேன். ஒரு பத்து வருடங்களாகத்தான் இது மிகப் பிரபலமடைந்து வருகிறது. இதன் காரணமாக உண்மைக் காதல் செழிக்கிறதோ என்னமோ ஆனால் வியாபாரம் செழிக்கிறது. காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன், ஆனால் அந்த அன்பை நல்ல ஆரோக்கிய நிலையில் உபயோகித்தால் அதைவிடச் சிறந்தது வேறில்லை! இந்தத் தினம் அன்பை வெளிப்படுத்த…ஆனால் அதை ரசாபாசமாக உபயோகிப்பதற்கு அல்ல, இந்தக் காதலின் அர்த்தம் நம் நாட்டில் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்களோ என்ற ஐயம் மனதிலே உண்டாகிறது, இந்தப் புனிதக் காதல் பிறந்தகதையைப் பார்த்தால் ஓரளவு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள முடியும்.
மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியஸ் என்றகொடுமை அரசன் தன் சேனையில் நிறைய பேர்கள் சேர ஒரு சட்டம் கொண்டு வந்தான் அதாவது கலயாணம் ஆகாதவர்கள் தான் சேனையில் சேர முடியும். அவரிடம் இருந்த Velaintine என்பவருக்கு இந்தச் சட்டம் பிடிக்கவில்லை, அவர் அரசனுக்குத் தெரியாமல் பல காதலர்களின் திருமணம் நடத்திவைத்தார், இது அரசனுக்குத் தெரிந்து, பின் அந்த நல்லவர் பிடிப்பட்டு மரணதண்டனையும் பெற்றார், எல்லோரும் கருணையுடனும் பாசத்துடனும் அவரை வந்து பார்த்தார்கள்.
ஜெயிலின் அதிகாரியின் சிறு மகள் அவர் மேல் மிகவும் அன்பு காட்டினாள். பிப்ரவரி 14ந்தேதி அவ்ருடைய கடைசி நாள் அன்று அந்தச் சிறு பெண்ணிற்கு ஒரு சின்னக் குறிப்பு எழுதிவைத்துவிட்டு மரணமடைந்தார். அதில்
” என் அன்பு…” என்று அவர் பெயரையும் இட்டிருந்தார். அந்த நாளிலிருந்து காதல் பரிமாற்றம் அவர் ஞாபகமாக நடக்கிறது.
ஒரு பூக்களின் மூலமாகவோ பொருட்களின் மூலமாகவோ இதை வெளிப்படுத்துகின்றனர். உண்மைக் காதலுக்கு நாமும் பச்சைக் கொடி காட்டுவோம், எதிர்பார்ப்பு இல்லாத அன்பை வாரி வாரி வழங்குவோம்.                                  
எல்லாக் காதலர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
 

அன்புடன் விசாலம்


காதலியைக் கவர ……

April 9, 2007

hillbilly_chic_laughing_lg_wht.gif

காதலியைக் கவர… சில {அசட்டு}யோசனைகள் படித்து விட்டு சிரிக்கவும். சிரிப்பு வரவில்லை என்றாலும் நான் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதால் சிரித்து விடவும்.
1.கோதுமை அல்வா கிண்டவும், அதை வில்லைப் போடவும் ஒரு வில்லையின் நடுவில் காதலிக்குப் பிடித்த மோதிரத்தை உள்ளே அழுத்தவும், மூடிவிடவும் ஆசையுடன் அவளுக்கு அளிக்கவும், அதை அவள் முழுதாக வாயில் போடாமல் பாதியாகப் பிய்த்து திங்கச் சொல்லவும், அவள் திறந்து பார்ப்பாள்… அதில் மோதிரம் மின்னும்… பின் என்ன? அவள் கண்கள் மலரும்… என்ன அன்பு? என்று வியப்பாள்… மோதிரம் வாங்கினது பெரிதல்ல ஆனால் உனக்காக அல்வா கிளறியது தான் மிகப் பெரிய காரியம். தோள் எல்லாம் ஒரே வலி என்று சொல்லுங்கள். தனக்காக இவ்வளவு கஷ்டப் பட்டிருகிறானா என் காதலன் என்று தோளைத் தடவிக் கொடுப்பாள். பின் என்ன ஜெயம்தான்.
2. ரொட்டி மாவு பிசைந்து ரொட்டி தட்டவும்… முதலில் தட்டுபவர்க்கு பழக்கமில்லாததால் இந்தியா போலும் வரும், வட்டமாக வராது மிகவும் சுலபமாகப் போய்விட்டது அழகாக இதயம் ஷேப்பில் தட்டி{அது தானாகவே வரும்} பின் அதில் சென்னாவில் ஐ லவ் யூ..! என்று கேக்கில் அலங்கரிப்பது போல் செய்து அளிக்கவும்… தோசையிலும் செய்யலாம்
3.ஒற்றை சிவப்பு ரோஜா மலரை ஒரு முள்ளுடன் வாங்கவும் அழகாக ரோமியோ கொடுப்பது போல் முட்டிப் போட்டு கொடுக்கவும். வேண்டுமென்றே அவளிடம் கொடுக்கும் போது முள் உங்கள் கையில் குத்தட்டும்… இப்போது உங்கள் விரலில் இரத்தம் பெருக அவள் பதறிப்போய் துப்பட்டாவைக் கிழித்து விரலைதொட்டு நாசூக்காக கட்டுவாள்.
பின் என்ன ஜெயம் தான்… காதல் கனிந்து விடும்!
இதில் அதிருஷ்டமும் கை கொடுக்க வேண்டும் பெண்ணின் மனதை எப்படி எடை போட முடியும்?

அன்புடன் விசாலம்


நாரயணீயம் பிறந்தது

April 9, 2007

krishna.gif

“அழகு கேரளத்தில், மேல்புத்தூரில் பிறந்தாயே
நாரயணா என்னும் நாமத்தில் வளர்ந்தாயே !
குருவின் வாத நோயை ஏற்றாயே
நாராயணீயம் பாட்டுக்கள் உதிர்ந்தனவே,
சிறு வயது, கல்வியில் மனமில்லை.
நற்பழக்கங்களுக்கும் இடமில்லை,
தந்தை சொல்லியும் கேட்கவில்லை
தாயின் பாசமும் உணரவில்லை,
வீட்டை விட்டு ஓடி வந்தாய்…
அச்சுத பிஷாரடியைச் சந்தித்தாய்,
அவர் அன்பில் நீ மாறினாய்,
அவர் மகளையும் மணந்தாய்,
வெட்டிப் பொழுது போக்கினாய்,
மனைவி மனம் உடைத்தாய்,
“வேதம் கற்று வருமானம் தேடு,
மனம் திருந்தி புண்ணியம் தேடு”
தயக்கமாகச் சொன்னார் மாமனார்,
அவரிடமே வேதம் இவன் கேட்டான்
மாமனார் பாவம் வேதம் கற்றார்,
சீடரும் ஆனார் குருவும் ஆனார்,
இனிமையான வேதம்
தப்பாமல் பிறந்தது,
குரு அச்சுதரின் ஆனந்தம்
சிலகாலமே நீடித்தது,
காய்ச்சல் வந்தது
கட்டிகள் வந்தன.
வாத நோயும் வந்தது
படுக்கையிலும் தள்ளியது,
ஊரில் ஏச்சுப் பேச்சு,
அந்தணரில்லை அச்சுதர்,
வேதம் கற்றது பாவச்செயல்,
வேதம் ஓதுவது தவறான செயல்
அதுவே வியாதி,,,,,,,,
தன் குருவுக்கு இந்த நோயா?
நீ கதறினாய் கண்ணனிடம் ஓடினாய்,
“அந்த நோய் எனக்கு வரட்டும்
என் குருவும் நன்கு பிழைக்கட்டும்
உன் தவம் பலித்தது
கண்ணன் கண்திறந்தான்,
வந்தது உனக்கு அந்த நோய்,
அச்சுத குரு குணம் பெற்றார்,
தாங்க முடியாத நிலை
உன் உடல் அழுகின
கண்ணனிடம் அர்ப்பித்தாய்,
தியானத்தில் மூழ்கினாய்
உடல் நிலை மறந்தாய்
ஒருவர் சொல் கேட்டு
குருவாயூர் சென்றாய்,
கண்ணனிடம் கதறினாய்
கனவில் வந்தான்
மாயக் கண்ணன், கூறினான்
“மருந்து எழுத்தச்சனிடம்,
வாங்கி குண்மடைவாய்”
மீன் பிடிக்கும் எழுத்தச்சன்
வியப்புடன் உன்னைப் பார்த்தான்,
“முதல் மீனைத் தொட்டுக் கொண்டு
ஸ்ரீ குருவாயூரப்பனைப் பாடு,
யோசனையில் ஆழ்ந்தான்,
பட்டெனெப் புரிந்தது
மச்சாவதாரத்திலிருந்து பாடினாய்,
கவிதை அருவியாகக் கொட்டின,
ஒரு தசகம் முடிய
“அப்படியா கண்ணா?” என்பாய்
“ஆம்” என்று தலை அசைப்பான்
குருவாயூரப்பன் கண்திறந்து,
ரோகம் போக வரம் கேட்பாய்,
நூறு தசகம் முடிந்தன.
பாகவதமும் பிறந்தன,
நோயின் பூரண குணம்
குளிர்ந்தது அவன் மனம்
:நாராயணீயம்: பிறந்தது
நோய் போக்கும் சஞ்சீவி இது.


அன்புடன் விசாலம்


இசையில் வளர்ந்த செடி!

April 9, 2007

பல விஞ்ஞானிகள் மிகவும் உழைத்து, பாடுபட்டு , பல பரிசோதனைகள் செய்து அதில் தோல்வி கண்டாலும்… வெற்றி அடையும்வரை மனம் தளராது இடைஞ்சல்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து புதிதாக ஒன்றைக் கண்டு பிடிக்கிறார்கள். அது கண்டு பிடித்தவுடன் நிச்சயம் சில எதிர்ப்புக்களை அவர்கள் சமாளித்து, பரிசோதனையுடன் அதை நிரூபித்துக் காட்டி, வெற்றி அடைகிறார்கள். இதில் அடிபட்டு வந்தவர் தான் பெரிய விஞ்ஞானி…மேதை ஸர் ஜகதீஷ் சந்தர பஸு பல ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் தாவரங்களுக்கு உயிர் இல்லை என்றுதான் நினைத்தனர். ஆனால் இந்த விஞ்ஞானி தாவரங்களுக்கும் வெப்பம், சூடு என்ற உணர்வுகள் உண்டு! என்றும் அவை விஷத்தில் மடிந்து போகின்றன. என்றும் கூறினார். அவைகளுக்கும் மனம் உடல் நரம்புகள் எல்லாம் இருக்கின்றன என்றார். எப்போதும் போல் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஷம் செடிக்குப் போட்டால் பட்டுப் போய் விடும் என்பதை நிரூபித்துக் காட்டு… என்றும் வாதாடினர், அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு ஒருவரிடம் விஷம் வாங்கி வரும்படி அனுப்பினார். இதற்கு என்று ஒரு நாள் குறிப்பிடப்பட்டு… சபையும் கூடியது. எல்லோரும்  அமைதியாய் அமர சர் ஜகதீஷ் வந்தார்.. அவருடன் மண்செட்டிகளும் செடிகளும் கூடவே வந்தன. அவர் விஷம் புட்டியிலிருந்து ஒரு செடிக்கு ஊற்றினார். கொஞ்சம் நேரம் கழிந்ததும் செடிகள் மலர்ந்த முகத்துடன் சிரித்தன. உடனே சபையில் எலோரும் “கொல்” என்று சிரித்தனர். இவர் அதற்கு பயப்படவில்லை.மனதளவில் ஏன் இப்படி நடந்திருக்கும்? என்ன நடந்திருக்கும்? என்று சிந்தித்தார். மனம் தளரவில்லை. கவலைப் படவில்லை. ஒரு முடிவுக்கு வந்தார்.. தான் அந்த விஷத்தைக் குடித்தார். எல்லோரும் செய்வதறியாது விக்கித்து நின்றனர்.  ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை! அதில் விஷமில்லாதது நிரூபணம ஆயிற்று பின் தானே விஷம் வாங்கி அதில் போட்டார் அந்தச் செடி இரண்டு நாளில் கருகி விட்டது பின் எல்லோரும் அவரதுஇந்தக் கண்டுபிடிப்பை புகழ்ந்து பாராட்டினர். செடிகள் இரவில் ஓய்வு பெறுமாம்… அதனால் இரவில் ஒன்றும் பறிக்கக் கூடாது என்கின்றனர்.
இப்போது நானும் இதைப் பரிசோதிக்கலாம் என்று எண்ணி
ஒரு நல்ல செடியை நட்டு அதற்கு எதிர்மறை அலைகளை தினமும் செலுத்தினேன். அது வளராமல் பூக்காமல் அப்படியே நின்றது. பின் வீட்டின் பூஜை செய்த மருவு என்ற வாசனைச் செடியை பூஜை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வாடி இருந்ததை நட்டேன். பின் அதனுடன்அன்பாகப் பேசினேன்.  ஆல்பா மைண்ட் பவரில் அது நன்றாக வளர்ந்து விட்டது போல்மனதில் படம் வரைந்தேன். மனதில் பதித்தேன் பின் நல்ல இசையின் ஒலி நாடாவும்வைத்தேன். பிரபஞ்சத்திலிருந்து சில சக்திகளயும் அதற்கு {cosmic energy } செலுத்தினேன். ஒரு வாரம் ஒன்றும் பலனில்லை ,ஆனால் தொடர்ந்து மேலும் ஒரு வாரம் செய்தேன், ஆஹா! அந்த நாள்… அழகாக கொழுந்துடன் மேலே கிளம்பி நின்றது என் மருவு செடி.

அன்புடன்விசாலம்


போகிப் பண்டிகை

April 9, 2007

                 fire.jpg

வந்தது போகிப் பண்டிகை

சூழ்கிறது ஒரே புகை,

வீட்டின் குப்பைகள் வெளியே வார,  

வெளிக்குப்பைகளும் அதனுடன் சேர,  

தெருவுக்குத்தெரு அதுவும் எரிய,

சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய,  

அளவிலாத மாசில் மூச்சும் அடைக்க,

இதுத் தேவையா? என்று மனமும் கேட்க…  

யார் சொல்லுவார் பதில்? இந்தச் சமூகத்தில் !

உன் மனதில் குப்பை நிறைந்துள்ளதே!

அதில் அழுக்கும் சேர்ந்துள்ளதே…

கெட்ட எண்ணங்களும் சுழலுதே!

அன்பும் வாய்மையும் போனதே,

அதையே முதலில் எரியப்பா,

மனதைப் புனிதம் ஆக்கப்பா,

அதுதான் போகித் திருநாளாம்,

அன்பு நிறைந்த மன நாளாம்

அன்புடன் விசாலம்